போர் வெற்றியின் உற்சாகத்தில் இருந்த ராஜபக்ஷ இந்தியப் பத்திரிகையாளர் ஒருவருக்குப் பேட்டி அளித்தபோது சொன்னார்: ‘‘நாங்கள் இந்தியாவுக்காகவும் போரிட்டிருக்கிறோம்!’’
ஆமாம். ராஜபக்ஷ பொய் சொல்லவில்லை. இந்தப் போரில் இந்தியா பின்னின்று பங்கேற்றது. போருக்கு முன் ‘எம்.ஐ. 17’ ரக ஹெலிகாப்டர்களில் தொடங்கி போருக்குப் பின் ‘விக்ரஹா’ ரோந்துக் கப்பல் வரை சகல படைக்கலன்களையும் இலங்கைக்கு வழங்கியது; ஆட்களை அனுப்பியது; சிங்களப் படைக்கு இங்கு பயிற்சி அளித்தது. கோடியக்கரையில் இருந்தும் உச்சிபுளியில் இருந்தும் கடல் பகுதியைக் கண்காணித்து உளவு சொன்னது; ராஜ தந்திர ரீதியாக போருக்கு எந்தத் தடையும் வராமல் பார்த்துக்கொண்டது. யோசித்துப் பாருங்கள்... இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என்று கோருவது எவ்வளவு அபத்தம்?
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
2009-ம் ஆண்டு மே 15-ம் தேதி அமெரிக்க பசிபிக் பிராந்திய கட்டளைத் தளபதி திமேத்தி ஜே கீட்டிங் அன்றைய இந்திய தேசியப் பாதுகாப்புச் செயலர் எம்.கே.நாராயணனையும் வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனனையும் சந்தித்தார். பின்னர், ‘‘இலங்கையில் போர்ப் பகுதியில் ‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு’ உதவ அமெரிக்கக் கப்பல் படைக் கப்பல்கள் தயார் நிலையில் இருக்கின்றன’’ என்று அறிவித்தார். விடுதலைப் புலிகள் தலைமை அமெரிக்காவிடமிருந்தும் இங்கிலாந்திடமிருந்தும் பொது மன்னிப்பு உறுதிமொழியை எதிர்பார்த்து சரணடைய காத்திருந்த நாள் அது. ‘ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைந்தால் பொது மன்னிப்பு’ என்ற பொய்யான வாக்குறுதி சர்வதேசத்தால் வழங்கப்பட்டதற்கான மறைமுக சாட்சி அது. ஆமாம். அமெரிக்காவுக்கும் இதில் பங்கு உண்டு. கொத்துகொத்தாக குண்டுகள் விழுந்தபோதும் தமிழ் உயிர்கள் வீழ்ந்தபோதும் எல்லோரும்தானே வேடிக்கை பார்த்தார்கள்? எல்லாருடைய விருப்பத்தின்பேரில்தான் அது நடந்தது!