காத்திருக்கும் புதைகுழி


    வரலாறு என்பது திட்டமிட்டு நிகழக் கூடியதல்ல. காலத்தின் அபத்தமான நிகழ்தகவில் கண நேரத்தில் நடந்துவிடக்கூடியது. சொல்லப்போனால், மிக சாதாரணமான - பொருட்படுத்தத் தகாத - அபத்தமான முடிவுகளே பெரும்பாலான வரலாறுகளை உருவாக்கி இருக்கின்றன. அமெரிக்க வரலாற்றில் வியூக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவை அறிவிக்கும் முன் இந்திய பிரதமருடன் அந்நாட்டு அதிபர் உரையாடியிருப்பதைச் சாதாரண நிகழ்வாகப் பார்க்க முடியவில்லை.
      ஆப்கன் போரில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது - அதாவது - போரை மேலும் தீவிரப்படுத்துவது என்று வெள்ளை மாளிகை எடுத்திருக்கும் முடிவை இப்போது மதிப்பிடுவது கடினமானது. இதைத் தவிர்த்து, இப்போதைக்கு அமெரிக்காவுக்கு வேறு நல்ல தெரிவுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அதேசமயம், இந்தப் போரில் அல் - காயிதா மற்றும் தாலிபன்களின் வலைப் பின்னல்களை அறுக்க நேசப் படைகள் - பாகிஸ்தான் கூட்டணி மட்டும் போதாது என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்திருக்கிறது. ராணுவ நடவடிக்கைகளில், ஆளில்லா 'காம்பட் ட்ரோன்' தாக்குதல் விமானங்களைப்போல இந்தியாவும் கை கோர்க்க வேண்டும் என்று அமெரிக்க வியூகவாதிகள் நினைக்கிறார்கள். இந்தப் பின்னணியிலேயே மன்மோகன் சிங் - ஒபாமா இடையேயான உரையாடல் நடந்தேறி இருக்கிறது.
உரையாடலைத் தொடர்ந்து, அமெரிக்க அறிவிப்புக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் வரவேற்பைப் பார்க்கும்போது அமெரிக்காவின் வியூகத்தை நோக்கி இந்தியா நகரத் தொடங்கிவிட்டதாகவே தோன்றுகிறது. ஒருவேளை ஆப்கனுக்கு இந்தியப் படைகளை அனுப்ப நம் அரசு முடிவெடுத்தால், ராணுவ ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் இந்தியா எடுக்கப்போகும் மிக மோசமான முடிவுகளில் ஒன்றாக அது அமையும். சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் கற்ற பாடங்களைவிடவும் மோசமான பாடங்களை இந்தியா கற்க வேண்டி வரும்.
      ஆப்கன் மீது 1979-ல் சோவியத் ஒன்றியம் போர் தொடுத்தது. ஏறத்தாழ 10 ஆண்டுகள் நீடித்த அந்தப் போரின் இறுதியில் வலுவான சோவியத் படைகள் தோல்வியைத் தழுவின. அப்புறம் 12 ஆண்டுகள் உள்நாட்டுச் சண்டை. பிறகு, 2001 முதல் அமெரிக்கா அங்கு போரிட்டுக்கொண்டிருக்கிறது. ரஷ்யாவும் சரி, அமெரிக்காவும் சரி; ஆப்கனைப் பற்றி நினைத்தது வேறு; நடந்தது வேறு. முன்னதாக, ஆங்கிலேயே - ஆப்கானியப் போர்களில் ஆங்கிலேயர்களுக்கு இப்படிதான் நேர்ந்தது. புவியியலைப்போலவே சிக்கலான சமூக இயக்கவியலைக் கொண்ட ஆப்கன் "ஏன் இந்த நாட்டுக்குள் காலடி எடுத்துவைத்தோம்'' என்ற மோசமான அனுபவத்தையே படையெடுத்த நாடுகளுக்கெல்லாம் அளித்திருக்கிறது. என்ன, ஆங்கிலேயர்களும் ரஷ்யர்களும் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டர்கள்; அமெரிக்கர்கள் முடிந்த வரை மோதிப் பார்க்க முடிவெடுத்திருக்கிறார்கள். அவ்வளவே.
    இந்நிலையில், இந்தியப் படைகள் ஆப்கனுக்குள் நுழைவது இந்தியாவுக்குத் தேவையற்ற தலைவலியை உருவாக்கும். ஏதோ ஒரு காலை வேளையில் அமெரிக்க விமானங்கள் தன் துருப்புகளைச் சுமந்து பல்லாயிரம் கி.மீ. தொலைவுக்கு அப்பால் பறந்த பின்னர் இந்த வலியின் தீவிரத்தை இந்தியா உணர வேண்டியிருக்கும். ஆப்கனில் ஏற்கெனவே இந்திய உளவுத் துறையின் கரங்கள் உள் வேலைகளில் பரவியிருக்கின்றன. மும்பைத் தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத் துறையின் தொடர்புகள் குறித்து கேட்டபோது அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஷாரப் வெளிப்படையாகச் சொன்னார்: "நீங்கள் 'ஐஎஸ்ஐ' மீது குற்றஞ்சாட்டுகிறீர்கள். ஆனால், ஆப்கனில் கந்தஹாரிலும் ஜலாலாபாத்திலும் இந்தியத் துணைத் தூதரகங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன? உங்கள் உளவுத் துறை என்ன செய்துகொண்டிருக்கிறது? வெளிப்படையாகச் சொன்னால், நீங்கள் 'ரா'விடம் எடுத்துச் சொல்ல வேண்டும். எங்கள் தரப்பினர் 'ஐஎஸ்ஐ'யிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்'' என்றார் முஷாரப். நம்மாட்கள் முஷாரப்புக்கு இன்னும் பதிலளித்த பாடில்லை.
    கடந்த சில மாதங்களாகவே இந்திய எல்லைகளில் அதிகரித்துவரும் சீன அத்துமீறல்கள், இந்தியாவின் அண்டை நாடுகளில் நிறுவப்படும் ராணுவ முக்கியத்துவம் மிக்க சீனக் கட்டமைப்புகள் குறித்த செய்திகள் இந்தியர்களிடையே ஒருவிதமான அச்சத்தை உருவாக்கிவருவதைப் பார்க்கிறோம். இதை எதிர்கொள்ள "இந்தியா ராணுவ ரீதியிலான பலத்தைப் பெருக்க வேண்டும்; சீனாவுக்குப் பாடம் புகட்ட வேண்டும்'' என்ற குரல்கள் எழுவதையும் பார்க்கிறோம். ஆனால், இந்தியா எங்கு தன் பலத்தைப் பெருக்க வேண்டும் என்றால், முதலில் ராஜதந்திர வட்டாரத்தில்தான். சுதந்திர இந்தியாவில் தொடர்ச்சியாக மிக மோசமான முடிவுகள் எடுக்கப்பட்ட துறை வெளியுறவுத் துறையாகவே இருக்கும். ஆகையால், இந்தியர்கள் முதலில் தம் குரலை நம்முடைய வெளியுறவுக் கொள்கைக்காக எழுப்புவதே பொருத்தமாக இருக்கும். தேவையும்கூட அதுவே. ஒருவேளை, "ஏனப்பா, ஒரு சம்பாஷனைக்கு இத்தனைப்  பின்கதை கட்ட வேண்டுமா?'' என்று கேட்பவர்களாக நீங்கள் இருந்தால், அமெரிக்காவும் ரஷ்யாவும் நடத்திய நிழல் யுத்தத்தில் முளைத்ததுதான் 'அல் - காயிதா' என்ற முன்கதையை ஒருமுறை நீங்கள் படிக்கக் கடவதாக!
2009 தினமணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக